Our Feeds


Thursday, April 3, 2025

SHAHNI RAMEES

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது. - அமைச்சர் சந்திரசேகர்

 

கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவு இலங்கைக்குரியது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பன தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (03) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இதனை கூறினார்.  

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால், அதனோடு சேர்ந்து கச்சத்தீவு பிரச்சினையும் வந்துவிடும். அதேபோல தேர்தல் பிரசாரத்திலும் அது பேசுபொருளாக மாறும். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களிலும் இது பற்றி பேசப்பட்டது. தற்போது முதல்வர் மு.கா. ஸ்டாலினும் அவ்வழியை கையாண்டுள்ளார்.  

ஆனால், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது. எனவே, தமிழகத்தில் தேர்தலுக்கு வேண்டுமானாலும் கச்சத்தீவு பிரச்சினையை வைத்து விளையாடலாம். அது இலங்கைக்குரியது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

அதேவேளை, தமிழக மீனவர்களிடமிருந்து பெறப்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ள கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிப்பது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதன் பயன்பாடு தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது மீனவர்களுக்கான வருகை அல்ல. 13ஆவது திருத்தத்துக்கான வருகையும் அல்ல. அவ்வாறு கூறிக்கொண்டு வேண்டுமானால் இங்குள்ள தமிழ்க் கட்சிகள் சுய திருப்தி அடையக்கூடும் என்றார். 

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »