விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை. விபத்துக்கு காரணம் அன்றைய தினம் பயிற்சி பெற்ற அதிகாரிகளால் ஏற்பட்ட தவறாகும் என இது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளை பார்வையிடுவதற்காக திங்கட்கிழமை (24) சென்றிருந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
விமானப்படையின் விமான விபத்து குறித்த அறிக்கையை பாதுகாப்பு செயலாளர் ஊடாக கடந்த 21ஆம் திகதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமையவும் பாதுகாப்பு செயலாளரின் விளக்கத்துக்கமையவும் விமானத்தின் உடற்பகுதியில் எந்த பிரச்சினையும் இல்லை.
அதேவேளை விமானத்தின் இயந்திரத்திலும் எந்த பிரச்சினையும் இல்லை. அது பழைய விமானமும் அல்ல. பழைய வாகனங்களை வீதிகளில் செலுத்துவதைப் போன்று விமானங்களை செலுத்த முடியாது. விமானத்தில் சென்றோர் பயிற்சி பெறுபவர்களாவர். பயிற்சியின் போதே தவறு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் அந்த இரு பயிற்சி அதிகாரிகளின் உயிர் பிழைத்தமை மகிழ்ச்சிக்குரியது. விபத்து குறித்த அறிக்கைக்கமைய அந்த பிரதேசத்தில் பாரியளவு சொத்து சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இந்த விபத்து பயிற்சியின் போது ஏற்பட்ட தவறால் நேர்ந்ததாகும். மாறாக வேறு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றார்.