ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் இணையவுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். ஐக்கிய மக்கள் சக்திக்கு யாருடனும் இணைய வேண்டிய தேவை இல்லை. உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எமது வெற்றியைத் தடுப்பதற்காகவே இவ்வாறான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட வேட்பாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சஜித், மஹிந்த, ரணில் இணையவுள்ளதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது மாத்திரமல்லாது அவ்வாறு செய்தி வெளியிட்டு தொலைகாட்சி அலைவரிசைகளில் காலையில் பத்திரிகை முக்கிய செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தலைப்புச் செய்திகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இது அப்பட்டமான பொய்யாகும்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு யாருடனும் சேர வேண்டிய தேவை இல்லை. நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெரும் வெற்றியடைவதை தடுக்க, வங்குரோத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன.
கடந்த அரசாங்கம் செய்ததையே மீண்டும் செய்வது முறைமை மாற்றமல்ல. மக்களை ஏமாற்ற ஐக்கிய மக்கள் சக்தி அச்சப்படுகின்றது. பொய்யை நம்ப வைப்பதற்கும், மக்களை அரசியல் ரீதியாக ஏமாறுவதற்கும் நாம் பயப்படுகிறோம். ஐக்கிய மக்கள் சக்தி சரியான முடிவுகளையே எடுத்து வருகின்றது. அரசாங்கமானது ஐக்கிய மக்கள் சக்தி பல்வேறு கட்சிகளுடன் கூட்டு சேர முயற்சிக்கின்றது என போலியான செய்திகளை கட்டமைத்து வருகிறது.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அத்தகையதொரு தீர்மானத்துக்கு வராது. நாம் இவர்களோடு இணையோம். ஐக்கிய மக்கள் சக்தி முதன்முறையாக உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதாலயே இவ்வாறான செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றார்.