உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அமைவாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகையை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
74 ரூபா முதல் 160 ரூபாவிக்கும் இடைப்பட்ட தொகையை தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு அறிவித்துள்ளது.
தேர்தல் நடைபெற உள்ள 336 உள்ளாட்சி நிறுவனங்களுக்கும் இந்தத் தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அமைவாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய மிகக் குறைந்த தொகையான 74 ரூபாய், மன்னார் உள்ளூராட்சி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்ச தொகை லஹுகல உள்ளூராட்சி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தொகை 160 ரூபாய் ஆகும்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்தால் வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் பூநகரி, மன்னார் மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இன்று மதியம் 12:00 மணியுடன் இந்த நடவடிக்கை நிறைவடைந்ததாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ளது.