Our Feeds


Thursday, January 30, 2025

Sri Lanka

பிரதமர் மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கு இடையில் கலந்துரையாடல்!


பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்த முடியாமல் சென்ற மற்றும் புதிய திட்டங்களை உள்ளடக்கியதாக பத்தாவது பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கான புதிய செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிப்பது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

பெண்களுக்குப் பாதுகாப்பான பணியிடத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் ஒன்றியத்தின் தலைவரினால் இங்கு வலியுறுத்தப்பட்டது. பெண்களை வலுவூட்டுவதாயின் பெண்கள் எந்தப் பிரச்சினைகளும் இன்றிப் பணியிடத்தில் சேரக்கூடிய வகையில் சமூகப் பாதுகாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சில பணியிடங்களில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதுடன், நிறுவனம் சார்பில் உயர்ந்த தரம் மற்றும் வினைத்திறனை அடைவதற்கு பெண்கள் சார்பில் நிறுவன மட்டத்தில் வழங்கப்பட வேண்டிய வசதிகள் போதுமானதாக இல்லையென இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.

அதன்படி, பணியிடத்தில் பெண்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் உள்ள சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

குழந்தைகளைப் பராமரித்தல் மற்றும் வளர்ப்பது போன்ற பொறுப்புகளால் பெண்கள் பணியிடங்களில் இணைவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் ஒன்றியம் கவனம் செலுத்தியது.  இதன் காரணமாக உயர்கல்வியைப் பெற்ற பெண்களுக்குக் கூட தொழிலாளர் சக்தியில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு இழக்கப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான கொள்கைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகளை வகுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், வீட்டுப் பணியாளர்கள் என்ற பெண்களின் உழைப்பை சமூகத்திற்கான உழைப்பாக மாற்றுவதற்கு ஏற்ற வகையில் வேலை நேரத்தைத் தளர்த்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டன. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எதிர்காலத்தில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலையீட்டை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ஆம் திகதியுடன் இணைந்ததான பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில்  பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி பண்டார கிரிஎல்லே, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கலாநிதி கெளஷல்யா ஆரியரத்ன, ஒஷானி உமங்கா, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, சட்டத்தரணி அனுஸ்கா திலகரத்ன, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, தீப்தி வாசலகே, சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, அம்பிகா சாமிவெல் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »