Our Feeds


Monday, October 14, 2024

Sri Lanka

கனமழை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களுகங்கையின் நீர்மட்டமானது மகுர பகுதியில் அதிகரித்து வருவதுடன், ஜின் கங்கையின் நீர்மட்டமானது பத்தேகம பகுதியிலும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், களனி கங்கையின் நலகம பகுதியிலும் அத்தனகலு ஓயாவின் துனமலே பகுதியிலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை மற்றும் பாதுக்க பிரதேச  செயலகப்பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின், எஹலியகொட, கிரியெல்ல, கலவானை, இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, கேகாலை, வரக்காபொல, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்ட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, வலல்லாவிட்ட, தொடங்கொட, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »