பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது என பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வருமான செலவு அறிக்கைகளை வழங்குவதில் சில வேட்பாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை இந்த வேட்பாளர்களும் சந்திக்க நேரிடலாம் என அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் காலத்தில் முறையான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்து ஜனநாயகம், சீர்திருத்தம் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க கருத்து வெளியிட்டார்.
“எந்த விதத்திலாவது ஒரு வேட்பாளர் தனது செலவு அறிக்கையை வழங்க முடியாவிட்டால், அல்லது அவர் தவறான தகவல்களை உள்ளிடினால், அவர் நீதித்துறை செயல்முறை மூலம் 3 ஆண்டுகளுக்கு தனது அரசியல் உரிமைகளை இழக்க நேரிடும். அவர் தேர்தல் மனு மூலம் தனது பதவியை இழக்க நேரிடும்.”