Our Feeds


Friday, September 27, 2024

Zameera

காலிமுகத்திடலில் நிறுத்தியுள்ள வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளுக்குப் மட்டும்


 கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.


மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது வருத்தமளிப்பதாகவும், இது தொடர்பில் முழுமையான மீளாய்வு நடத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

காலிமுகத்திடல் வளாகம் உட்பட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கும் வகையில் அந்த இடத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், பொதுமக்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், முறைகேடாகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து முழுமையான ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த வாகனங்களை அத்தியாவசியமான சேவைகளுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட 59 வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்தினூடாகத் தனது நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர், வாகன இறக்குமதி தடை செய்யப்பட்ட காலப்பகுதியில் மாத்திரம் 16 வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் உள்ள 833 வாகனங்களில் 29 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும் இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பணித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »