Our Feeds


Friday, September 6, 2024

SHAHNI RAMEES

தமிழ் மக்களிடம் 13ஐ தருகிறேன் என வியாபாரம் பேசமாட்டேன் - அநுர

 

தமிழ் மக்களிடம் 13ஐ தருகிறேன் என்ற வியாபாரத்தைக் கூறமாட்டேன் என தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க ஒட்டுமொத்த இலங்கை மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதோடு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவேன் எனவும் தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற பிரச்சார  கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களிடம் 13ஐ வைத்து வியாபாரம் செய்வதற்கு நான் வரவில்லை. அந்த வியாபாரத்தை செய்யும் நோக்கமும் எனக்கு இல்லை.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களுக்கு 13ஐ காட்டி வாக்குகளை பெறும் முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

நான் தமிழ் மக்களிடம் 13ஐ தருகிறேன் என வியாபாரம் பேச மாட்டேன். ஒட்டுமொத்த இலங்கை மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்குவதோடு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவேன்.

நாட்டில் நீண்ட காலமாக புரையோடியுள்ள இலஞ்சம், ஊழல்வாதிகளை அப்புறப்படுத்தி புதிய இலங்கையை உருவாக்குவதே எனது இலக்கு. அதற்காகவே மக்கள் எங்களோடு அணி திரண்டுள்ளனர்.

நாட்டு மக்கள் எம்முடன் திரண்டுள்ள நிலையில் சுமந்திரன், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சீரழிக்கப்பார்க்கிறார்.

சஜித் பிரேமதாச 13ஐ தரப்போகிறாரா அல்லது 13 பிளஸ் தரப்போகிறாரா என்பது தொடர்பில் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

நாங்கள் நாட்டை கொள்ளையடிக்கவில்லை; நாட்டு மக்களை கடனாளியாக்கவில்லை.

நாட்டை கொள்ளையடித்தவர்களும் நாட்டை கடனாளியாக்கியவர்களும் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சஜித் மற்றும் ரணில் பக்கமே உள்ளனர்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால், ராஜபக்ஷர்கள் நாட்டை கொள்ளையடித்துவிட்டார்கள் என கூறிய ரணில் தரப்பினரில் சிலர் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச பக்கம் உள்ளனர்.

அதேபோல மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் மோசடிகளை மூடி மறைப்பதற்காக ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.

இவருடன் ஊழல் மோசடிகளை தடுப்போம் என கூறிவந்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பக்கத்தில் இருந்த சிலர் நாமல் ராஜபக்ஷவின் பக்கத்துக்கு சென்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால், நாமல், சஜித், ரணில் அணிகள் நாட்டை திருடி நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற நபர்களை உள்ளடக்கிய கூட்டமே பகுதி பகுதியாக மூவர் பக்கமும் பிரிந்து நிற்கின்றனர்.

இவர்களால் நாட்டை அழித்தவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஏனெனில், மூவரும் ஒருவரை ஒருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்துள்ளார்கள்.

ஆகவே, தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ள மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு மக்கள் தயாராக இருக்கின்ற நிலையில் வடக்கு மக்களும் இந்த மாற்றத்தில் பங்கெடுக்க தயாராக இருக்க வேண்டும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »