(எப்.அய்னா)
தங்க நகை தொடர்பிலான விவகார விசாரணை தொடர்பில், கைது செய்யப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை படல்கமுவ பொலிஸார், பன்றி இறைச்சியை ஊட்ட முயற்சித்தும், தொழும் போது உதைத்து அதனை தடுத்தும் குற்றத்தை ஒப்புக்கொள்ள அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பிரத்தியேக விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது.
மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த மொஹம்மட் நிப்லி எனும் வர்த்தகர் எதிர்கொண்ட குறித்த சம்பவத்தை விடிவெள்ளி வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்த்து சில சமூக ஊடகங்களும் காணொளியாக அதனை வெளிப்படுத்தின.
இந்நிலையில் குறித்த விவகாரம் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு அவர் ஆலோசனை வழக்கியுள்ளார்.
அதன்படி நேற்று முன்தினம், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு இந்த விடயம் தொடர்பில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வர்த்தகரிடம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் சில்வாவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 14ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறும் வர்த்தகர் நிப்லி, இது தொடர்பில் நீதிமன்றுக்கும் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கும் வர்த்தகர் நிப்லி முறைப்பாடு செய்துள்ளார்.
முன்னதாக இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, வர்த்தகர் மொஹம்மட் நிப்லி கூறுவதைப்போல ஏதேனும் அழுத்தங்கள், அநீதிகள் நடந்திருப்பின் அது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கோ அல்லது உரிய தரப்பினருக்கோ முறைப்பாடளிக்கும் பட்சத்தில் அது குறித்து விசாரணை நடாத்த தயார் என குறிப்பிட்டிருந்தார்.
மொஹம்மட் நிப்லி முன்பு தங்க நகை கடை நடாத்தியவர். தற்போது தங்க நகைகளை உரிமையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்து வர்த்தகம் செய்து வருபவர். மினுவாங்கொடையை சேர்ந்த அவர், படல்கமுவ பொலிஸாரால், திவுலபிட்டிய பகுதியை அண்மித்த இடமொன்றில் வைத்து கடந்த ஜூன் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன்போது, 12 பவுன் தங்க நகைகளை கோரி பொலிஸார் அவரை சித்திரவதை செய்ததாகவும், இதன்போதே அவருக்கு பன்றி இறைச்சியை ஊட்ட முயற்சிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.- Vidivelli