Our Feeds


Friday, July 5, 2024

Zameera

யார் தேர்தலில் களமிறங்கினாலும் அது எனது பயணத்துக்கு தடையில்லை


 தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கும் உரிமை எந்தவொரு பிரஜைக்கும் உண்டு. அந்த வகையில் தமிழ் பொது வேட்பாளர் மாத்திரமின்றி, யார் தேர்தலில் களமிறங்கினாலும் அது எனது பயணத்துக்கு தடையாக அமையாது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

யுத்த காலத்தில் ஆயுதங்களை பரிமாற்றிக் கொண்டமை தொடர்பில் மட்டக்களப்பில் கருத்துக்களை வெளியிட்ட இருவரையும் அது தொடர்பில் ஊடகங்களில் விவாதத்தை நடத்துமாறு கூறுங்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

மட்டகளப்பில் வியாழக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் சட்டத்துக்கமைய தேர்தல் இடம்பெற வேண்டும். தேர்தல் ஆணைக்குழு நியாயத்துடன் செயற்படும் என்று நம்புகின்றேன். சமூகத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பாதுகாப்பு படையினர் தவிர சிவில் அதிகாரிகளுக்கு ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டமாகும்.

எனவே அந்த சட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துவோம். அநுரகுமார திஸாநாயக்கவும், சிவனேசதுறை சந்திகாந்தனும் ஆயுதங்களை பரிமாற்றிக் கொண்டதைப் பற்றி பேசியுள்ளனர் அல்லவா? யார் யாருக்கு கொடுத்தார்கள், யாரிடமிருந்து யார் வாங்கினார்கள் என்பது தொடர்பில் தொலைக்காட்சியில் விவாதமொன்றை நடத்தச் சொல்லுங்கள். அது எனது பொறுப்பல்ல.

தமிழ் பொது வேட்பாளர் குறித்து எனக்கு தெரியாது. நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜைக்கும் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்க முடியும். அது எமது சுதந்திரமாகும். ஆனால் எந்தவொரு வேட்பாளரும் எனது பயணத்துக்கு தடையாக மாட்டார்கள். நான் எனது தந்தையின் பெயரை வைத்து அரசியல் செய்யவில்லை. என்னால் முன்னெடுக்கப்படுவது சிறிய பிரேமதாசவின் வேலைத்திட்டங்களாகும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »