Our Feeds


Friday, May 24, 2024

Zameera

பலஸ்தீனத்தை அங்கீகரிக்க சர்வதேச நாடுகளும் திட்டம்


 பலஸ்தீன் அரசை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ள நிலையில், சர்வதேச சூழலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மேலும் சில ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1988ம் ஆண்டு முதல் பலஸ்தீனத்திற்கான அங்கீகாரம் தொடர்பான குரல்கள் தீவிரமாக எழுந்து வருகின்றன. இதே ஆண்டில்தான் பலஸ்தீன விடுதலை அமைப்பு பலஸ்தீன அரசை நிறுவுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஜெருசலேம் தலைநகர் என்று அறிவிக்கப்பட்டாலும் அதன் எல்லைகளை குறிப்பிடவில்லை.

இஸ்ரேல் பலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கவில்லை. மட்டுமல்லாது மேற்குக் கரை மற்றும் காஸாவில் பலஸ்தீன அரசை உருவாக்குவதையும் இஸ்ரேல் எதிர்க்கிறது. அத்தகைய அரசு தங்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இஸ்ரேல் வாதிடுகிறது. இஸ்ரேலுடன் அமெரிக்கா நட்புறவு கொண்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு இஸ்ரேலுக்கு திருப்தியுடையதாக இல்லை.

இஸ்ரேலுடன் இணைந்து சுதந்திர பலஸ்தீனிய அரசை உருவாக்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கிறது. இஸ்ரேல் – பலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகள்தான் தீர்வு என்று அது கருதுகிறது. ஆனால் அத்தகைய அரசு இரு தரப்புக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே வர வேண்டும் என்றும் அமெரிக்கா கூறுகிறது.

இப்படி இருக்கையில்தான் சமீபத்தில் ஐநாவில் பலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராக அங்கீகரிக்க நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றியடைந்திருக்கிறது. அதாவது, ஐக்கிய நாடுகள் அவையில் பலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு மே 10ம் திகதி தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அவையின் அவசர கூட்டம் அன்றைய தினம் கூடியது. இந்த கூட்டத்தில் பலஸ்தீனத்தை ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்தர உறுப்பு நாடாக சேர்ப்பது தொடர்பான அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் 193 நாடுகள் உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜென்டினா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்துள்ளன.

எனவே அதிக பெரும்பான்மை ஆதரவு பெற்று ஐக்கிய நாடுகள் சபையில், பலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்கும் வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை மே 28 முதல் பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.

இது ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றமாகும். பொதுவாக ஐரோப்பா முழுவதும் பிரிட்டன் கன்ட்ரோலில்தான் இருக்கும். பிரிட்டன், பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க விரும்பவில்லை. எனவே ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் பலஸ்தீனத்தை அங்கீகரித்தது.

இதற்கெல்லாம் விதை போட்டது ஸ்வீடன்தான். கடந்த 2014ம் ஆண்டே ஸ்வீடன் பலஸ்தீனத்தை அங்கீகரித்துவிட்டது. அந்த வகையில் ஸ்வீடன்தான் பலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் ஐரோப்பிய நாடாகும். இதனை தொடர்ந்து பல்கேரியா, சைப்ரஸ், செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளும் பலஸ்தீனத்தை அங்கீகரித்தது.

இது தவிர மால்டா மற்றும் ஸ்லோவேனியாவும் சூழல்கள் சரியாக இருந்தால் பலஸ்தீனத்தை அங்கீகரிக்க தயார் என்று அறிவித்துள்ளன. ஆஸ்திரேலியாவும் பலஸ்தீனத்தை அங்கீகரிக்க முன்வந்திருக்கிறது. பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது பிரான்சுக்கு தடையாக இருக்காது என்று அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் கூறியிருக்கிறார். எனவே சர்வதேச அளவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குரல்கள் எழுந்து வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »