இஸ்ரேல் அனைத்து யுத்தங்களிலும் வெற்றிபெற்றாலும் இந்தப் போரில் வெற்றிபெற முடியாது. உலக மக்களின் ஆதரவு தற்போது பலஸ்தீன் பக்கம் திரும்பியுள்ளது. என ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
காஸாவில் தற்போது நடைபெற்று வரும் யுத்தம் எமது பிராந்தியத்திற்கு மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுடன் யுத்தம் ஆரம்பமானது. அந்நேரத்தில் இஸ்ரேல் மீது அனுதாபம் உண்டாகியது.
யுத்தம் இரண்டு மாதங்களை தாண்டிப் போகிற இந்நேரத்தில் அனுதாபம் பாலஸ்தீன மக்கள் பக்கம் திரும்பியுள்ளது. இந்த அனுதாபம் ஹமாஸ் இயக்கத்திற்கானது அல்ல. பலஸ்தீன மக்களுக்கானது.
இந்த யுத்தம் மற்ற யுத்தங்களுடன் ஒப்பிடும் போது வித்தியாசப்படுகிறது.
இஸ்ரேல் அனைத்து யுத்தங்களிலும் வெற்றிபெற்றாலும் இந்தப் போரில் வெற்றிபெற முடியாது. உலக மக்களின் ஆதரவு தற்போது பலஸ்தீன் பக்கம் திரும்பியுள்ளது. உலகம் முழுவதுமுள்ள ஹமாஸ் உறுப்பினர்களை நாளை அழித்து முடித்தாலும் இந்தப் பிரச்சினையின் அடிப்படை இல்லாமலாகாது. ஏனெனில் அடுத்த தலைமுறையும் அங்கிருக்கிறது.
இந்த யுத்தத்தின் அச்சுறுத்தல் அமெரிக்கா, ஐரோப்பா வரை பரவிவிட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் வரை இதன் செய்திகள் பரவியுள்ளது.
இதுவொரு அரசியல் பிரச்சினை, இன்னொரு விதத்தில் இதுவொரு யுத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.
இதுவரை 18 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதால் உலகம் முழுவதிலுமுள்ள ஊடகங்களின் ஆதரவும் பாலஸ்தீன் பக்கம் திரும்பியுள்ளது. இப்போது இந்த யுத்தம் காஸாவில் மட்டும் நடைபெறவில்லை. நமது வீட்டுக்குள்ளும், சாப்பாட்டு மேசை வரை ஏன் படுக்கையறை வரையும் வந்துவிட்டது. (SN)