இஸ்ரேல் - ஹமாஸ் போரின் உடனடி நிறுத்தத்திற்கான ஐ.நா.வின் தீர்மானத்தை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது. அதிகபட்ச உறுப்பினர்களால் ஏற்கப்பட்ட இந்த தீர்மானம் அமெரிக்காவால் மறுக்கப்பட்டுள்ளது.
பல நாடுகள் காஸாவில் மனிதநேய ரீதியாக உடனடி போர் நிறுத்தத்தை கோரியுள்ள நிலையில் அமெரிக்கா அதற்கு எதிரான தன் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அமெரிக்காவின் துணைத் தூதர் ராபர்ட் உட், போரை உடனடியாக நிறுத்துவது ஹமாஸ் அமைப்பை மீண்டும் வலுப்பெற வைத்துவிடும் என்றும், மீண்டும் காஸாவை அவர்கள் கைப்பற்ற காரணமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நிரந்தர அமைதியை நிலை நாட்டுவதிலும், இரண்டு மாநிலத் தீர்விலும் ஹமாஸ் அமைப்புக்கு முற்றிலும் உடன்பாடில்லை எனத் தெரிவித்தார். அமெரிக்கா நிரந்தர அமைதியையே விரும்புவதாகவும் கூறினார்.
அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டால் பல நாடுகள் நம்பிக்கை இழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளன. அமெரிக்கா, இந்த முடிவின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் மரண தண்டனையை வழங்கியுள்ளது என ஐ.நாவின் ரஷ்ய துணைத் தூதர் டிமிட்ரி போல்யான்ஸ்கை கூறியுள்ளார்.
ஹமாஸின் தாக்குதலுக்கு ஆயிரக்கணக்கான அப்பாவி பலஸ்தீனர்களைத் தண்டிப்பது எந்த விதத்திலும் சரியல்ல என ஐ.நா.வின் பொது செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.