கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடந்த மூன்று நாட்களாக இரத்தப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளமையால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமையால் நோயாளர்கள் பணம் செலுத்தி இரத்த பரிசோதனை அறிக்கைகளை தனியார் பரிசோதனை கூடங்களில் இருந்து கொண்டுவர வேண்டியுள்ளதுடன், இரத்த பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இரத்தப் பரிசோதனைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை உரிய அதிகாரிகள் அறிவிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இந்நிலைமையினால் வறிய நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலைமை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவிக்கையில், வெளிநோயாளர் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் குளிரூட்டி (ஏசி) பழுதடைந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதான இரத்த பரிசோதனை அலகு மூலம் இரத்த பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
சீன அரசால் மானியமாக வழங்கப்பட்ட குறித்த கட்டிடத்தின் குளிரூட்டி அமைப்பைக் சரிசெய்ய சில நாட்கள் ஆகும் என்று சீன அதிகாரிகள் கூறியதுடன், தொழிற்சங்க பிரதிநிதிகள் குறித்த கட்டிடம் பணி நிறைவடைவதற்கு முன்னர் திறக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.