Our Feeds


Wednesday, December 6, 2023

News Editor

’சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும்’


 யாழ்.பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்லூரியை தொடர்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான  எஸ்.ஸ்ரீதரன்  கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்

அத்துடன்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நலன்களுக்காக தேசிய கல்வி நிறுவனத்தின் கிளை நிறுவனத்தை முல்லைத்தீவு மாங்குளத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 பேராதனை பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ்,ஆங்கிலம் மற்றும் சிங்களம் மொழியில் கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்ட கல்வியை தொடர வாய்ப்பில்லை. தமது தாய்மொழியில் சட்ட கல்வியை கற்க எதிர்பார்க்கிறார்கள்.ஆகவே அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1988 ஆம் ஆண்டு நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்துக்கு தெரிவானேன்.அப்போதைய சூழ்நிலையால் என்னால் சட்ட கல்வியை தொடர முடியவில்லை.சட்டக்கல்வி வாய்ப்பு யாழ்.பல்கலைக்கழத்தில் இருந்திருந்தால் நானும் ஒரு சட்டத்தரணியாகியிருப்பேன்.ஆகவே தமிழ் மாணவர்கள் தமது தாய்மொழியில் சட்டத்தை கற்கும் வாய்ப்பை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மிக முக்கிய பல்கலைக்கழகமாக உள்ளது.யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வியற் துறையை 'பீடமாக ' உருவாக்குமாறு கடந்த ஆண்டும் வலியுறுத்தினேன்.ஆனால் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

தேசிய கல்வி நிறுவகத்தின் கிளையை  முல்லைத்தீவு மாங்குளத்தில் நிறுவுமாறு பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.தற்போதைய பொருளாதார சுமைகளுக்கு மத்தியில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் தமது துறைசார் நடவடிக்கைகளுக்காக தலைநகருக்கு வருவதால் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.ஆகவே இந்த கோரிக்கை தொடர்பில் கரிசனை கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். 

யாழ்.தீவக பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கடினமான முறையில் தான் சேவையில் ஈடுபடுகிறார்கள்.ஆகவே அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்றார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »