கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் உள்ள அபாயகரமான கட்டிடங்கள் மற்றும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
கம்பஹா மற்றும் மினுவாங்கொடை கல்வி வலயங்களில் இருந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கம்பஹா மற்றும் மினுவாங்கொடை வலயங்களில் உள்ள அத்தகைய பாடசாலைகளின் பட்டியலை உடனடியாக வலயக் கல்வி அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தினார்.
கம்பஹா மாவட்டச் செயலகத்தில் இன்று (11) நடைபெற்ற கம்பஹா கல்விக் கட்டமைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இவ்வாறான பாடசாலைகளை இனங்கண்டு, அடுத்த வருட ஆரம்பத்திற்குள், முன்னுரிமை அடிப்படையில் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பொதுவாக இதுபோன்ற திட்டத்தை உருவாக்க சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவாகும். எனவே தான் இதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையை தொடர்பு கொண்டோம். கம்பஹா கல்விப் பிரிவில் 48 பாடசாலைகள் உள்ளன. தற்போது 21 பாடசாலைகளுக்கு இந்தத் திட்டங்களைத் தயாரித்துள்ளோம்.
கம்பஹாவிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் விரைவில் இந்தத் திட்டங்களைச் செய்வோம் என நம்புகிறோம். அடுத்த வருடம் பாடசாலைகளின் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது பாடசாலைகள் தாங்கள் பெறும் பணத்தை அதிகம் பயன்படுத்த முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.