Our Feeds


Sunday, December 3, 2023

SHAHNI RAMEES

நாணய நிதியத்தின் 330 மில்லியன் டொலர் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் - நிதி அமைச்சு

 

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளதுடன், உலக வங்கியுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளுக்கு அமைவாக, மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இம்மாதத்தில் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்தது.

கடன் மீள் செலுத்தலுக்கான நிவாரண காலத்தை இலங்கைக்கு வழங்கியுள்ள சர்வதேச மற்றும் தனியார் கடன் வழங்குநர்கள் கடனுக்கான வட்டி தொகையில் குறிப்பிட்ட தொகையை தள்ளுபடி செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டது.

இது குறித்து நிதி அமைச்சின் பேச்சாளர் மேலும் கூறுகையில்,

தேசிய மற்றும் சர்வதேச கடன் மறுசீரமைப்புகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இம்மாதத்தில் 780 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது. சர்வதேச மற்றும் தனியார் கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு கடனை மீள் செலுத்த நிவாரண காலத்தை வழங்கவும் இணங்கியுள்ளனர்.

மேலும், கடன் மற்றும் வட்டியை மீள்செலுத்த நிவாரண காலமும் கடன் வட்டியில் குறிப்பிட்ட தொகையை தள்ளுபடி செய்வதற்கும் சர்வதேச கடன் வழங்குநர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது. மறுபுறம் உலக வங்கியுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளுக்கு அமைவாக மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு இம்மாதத்தில் கிடைக்கப்பெறும்.

இதன் பிரகாரம், இந்த டிசெம்பர் மாதத்தில் 780 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (257 பில்லியன் ரூபா) இலங்கைக்கு கிடைக்கும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்த நிதிகளை பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, நிதி இராஜாங்க அமைச்சர்களான செஹான் சேமசிங்க மற்றும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உள்ளிட்ட மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றனர் என்று கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »