மேல் மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்காக இந்த தபால் நிலையங்களை திறந்து வைக்கவுள்ளதாகவும், மக்களின் வசதிக்காக தபால் திணைக்களமும் பொலிஸாரும் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொரட்டுவை, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பஞ்சவீதிய, பத்தரமுல்ல, கல்கிஸ்ஸை, நுகேகொட, சீத்தவாக்கபுர ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தை எவ்வித அசௌகரியமும் இன்றி இக்காலப்பகுதியில் மேற்படி தபால் நிலையங்களில் செலுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.