கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் 102 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று (11) பிற்பகல் சுமார் 139 கைதிகள் தப்பிச் சென்றதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
மேலும் 37 கைதிகளை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
“கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு பிரிவினரிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இங்கு நீண்டகாலமாக போதைக்கு அடிமையானவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த குழப்பத்தின் போது முகாமில் இருந்து சிலர் தப்பிச் சென்றுள்ளனர். முதல் சம்பவம் மாலை 5 மணியளவில் நடந்துள்ளது. அதன் பின்னர் மற்றொரு பகுதியினர் தப்பிச்சென்றுள்ளனர். 484 பேர் உள்ளே இருந்தனர். அதிலும் இரண்டு முறையும் அவர்கள் வெளியே சென்று வந்தவர்கள். அவர்களை மீண்டும் முகாமிற்கு கொண்டு வர இராணுவ வீரர்களும் பொலிஸாரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். குழுக்கள் பிளவுபட்டுள்ளன. வந்தவர்கள் நீர்கொழும்பில் இருந்து, கொழும்பில் இருந்து வந்தவர்கள், காலியில் இருந்து வந்தவர்கள், தமது அதிகாரத்தினை நிலைநாட்டுவதற்காக உள்ளுக்குள் சிறிய காரியங்களைச் செய்துள்ளார்கள். அந்தச் சூழ்நிலையில் இது நடந்தது.”
வெலிகந்த, கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தின் கைதிகள் குழுவொன்று கடந்த வருடமும் தப்பிச் சென்றது.
அந்த மையத்தில் ஒரு கைதியின் சந்தேக மரணம் தொடர்பான சூழ்நிலையால் இது ஏற்பட்டது.
போதைக்கு அடிமையானவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அந்தந்த மையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், புனர்வாழ்வு நிலையத்தின் கைதிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு தப்பிச் செல்லும் சம்பவங்கள் தொடர்வதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.