Our Feeds


Tuesday, December 5, 2023

Anonymous

வேகமாக பரவும் டெங்கு – கடந்த மூன்று நாட்களில் 1000 பேர் அடையாளம் - கொழும்பில் அதிகமானவர்கள் அடையாளம்.

 



2023ம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று வருடங்களைவிட அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆய்வின்படி, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் முறையே 31 ஆயிரத்து 139, 35 ஆயிரத்து 54 மற்றும் 76 ஆயிரத்த 467 என பதிவாகியிருந்த நிலையில், இவ்வருடத்தில் டிசம்பர் 04 ஆம் திகதிவரை, மொத்தமாக 77ஆயிரத்து 487 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 


குறித்த எண்ணிக்கையில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 363 ஆக பதிவாகியுள்ளனர். 


மாகாண ரீதியாக மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அது 36ஆயிரத்து 266 என கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டில் இவ்வருடத்தில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் 47 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் உள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


இதேவேளை, 2023 இல் டெங்கு வேகமாகப் பரவுவதைக் குறிக்கும் வகையில் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன், டிசம்பர் மாதத்தின் கடைசி மூன்று நாட்களுக்குள் இலங்கையில் சரியாக 1,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


அதன்படி, நாளொன்றுக்கு சுமார் 300 நோயாளர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். 


தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


எனவே, டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »