Our Feeds


Sunday, November 12, 2023

Anonymous

இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகிறதா பிரான்ஸ்? - அப்பாவிகளை கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்கிறார் மெக்ரான்..!

 



காஸாவில் பெண்கள், குழந்தைகளைக் கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் BBC க்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.


பலஸ்தீன் மீதான தாக்குதலுக்கு ‘எந்த நியாயமும் இல்லை’ போர் நிறுத்தம் இஸ்ரேலுக்கு நன்மையாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு நாங்கள் அவர்களை வலியுறுத்துகிறோம்,” என்று அவர் குறித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ஹமாஸின் “பயங்கரவாத” நடவடிக்கைகளை பிரான்ஸ் “தெளிவாகக் கண்டிக்கிறது” என்றும் அவர் வலியுறுத்தினார்.


இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற மேற்கத்திய நாடுகளைப் போலவே பிரான்சும் ஹமாஸை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறது.


அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மற்ற நாட்டின் தலைவர்கள் போர் நிறுத்தத்திற்கான அவரது அழைப்பில் இணைய வேண்டுமா? என்று கேட்டபோது, “அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று பதிலளித்தார்.


இஸ்ரேல் மீதான தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இஸ்ரேல் ஒரு பெரிய தரைவழித் தாக்குதலை காஸாவுக்குள் தொடங்கியது. காஸாவின் ஹமாஸ் நடத்தும் ஆட்சியின் சுகாதார அமைச்சகம் கடந்த வெள்ளிக் கிழமையன்று 11,078 பேர் கொல்லப்பட்டதாகவும் 1.5 மில்லியன் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் கூறியது.


சர்வதேச சட்டத்திற்கு இணங்க ராணுவ இலக்குகளைத் தாக்குவதாக இஸ்ரேல் கூறுகிறது. மேலும், தாக்குதல்களுக்கு முன்னதாக எச்சரிக்கைகளை வழங்குவது, மக்களை வெளியேற்ற அழைப்பு விடுப்பது போன்ற பொதுமக்கள் உயிரிழப்புகளைக் குறைக்க நடடிக்கை எடுப்பதாகவும் கூறுகிறது.


காஸா போர் பற்றி பாரிஸில் நடந்த மனிதாபிமான உதவி மாநாட்டைத் தொடர்ந்து அடுத்த நாள் பேசிய மக்ரோன், “முதலில் மனிதாபிமான இடை நிறுத்தத்தை செய்வதைத் தவிர வேறு தீர்வு இல்லை” என்பதே அந்த மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரசுகள் மற்றும் அமைப்புகளின் “தெளிவான முடிவாக” இருந்தது என்று கூறினார். “போர் நிறுத்தம் பயங்கரவாதிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொது மக்களைப் பாதுகாக்க அனுமதிக்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.


“உண்மையில், இன்று பொதுமக்கள் குண்டுவெடிப்புக்கு ஆளாகிறார்கள். இந்தக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், குண்டுவீசிக் கொல்லப்பட்டனர். அதற்கு எந்தக் காரணமும் இல்லை. எனவே இஸ்ரேலை நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.”


இதே நேரம் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என்பதை முடிவு செய்வது தனது பணி இல்லை என்றும் மக்ரோன் கூறினார்.


மக்ரோனின் கருத்துகளுக்கு பதிலளித்த இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உலக நாடுகள் ஹமாஸை தான் கண்டிக்க வேண்டும், இஸ்ரேலை அல்ல என்று பதிலளித்துள்ளார்.


“காசாவில் ஹமாஸ் இன்று செய்யும் குற்றங்கள் நாளை பாரிஸ், நியூயார்க் மற்றும் உலகெங்கிலும் செய்யப்படும்” என்று நெதன்யாகு அலுவலகத்தில் இருந்து வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது.


வருடாந்திர பாரிஸ் அமைதி மன்றத்தின் முதல் நாள் முடிவில் ஒரு பரந்த நேர்காணலில், அதிபர் மக்ரோனும் விவாதித்தார்.


மத்திய கிழக்கில் இருந்து பிரான்சுக்குள் பரவும் வன்முறை பற்றிய அச்சம், அனைத்து மதங்களைச் சேர்ந்த குடிமக்களையும் “யூத எதிர்ப்பு மனநிலைக்கு எதிராக ஒன்றுபட” வலியுறுத்துகிறது.


யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் யுக்ரேனுக்கு உதவுவது பிரான்ஸின் கடமை என்று கூறியதோடு, ஆனால், ரஷ்யாவுடன் “நியாயமான, நல்ல பேச்சுவார்த்தைகளுக்கு” ஒரு நேரம் வரலாம் என்றும் பரிந்துரைத்தார்.


பாரிஸ் அமைதி மன்றத்தில் ஒரு முக்கியத் தலைப்பாக “இணைய பயங்கரவாதம் குறித்தும் விவாதித்தார் பிரான்ஸ் அதிபர் மக்ரோன்”. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களைத் தனித்தனியாகக் குறிப்பிட்டு, அந்த நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வெறுப்புப் பேச்சுகளை மிதப்படுத்துவதாக அளித்த வாக்குறுதிகள் பற்றியும் பேசினார்.


காலநிலை மாற்றத்தின் அபாயங்கள், உலகெங்கிலும் உள்ள மக்களை “பயங்கரவாதத்தை” நோக்கித் தள்ளுவதாகக் கூறினார்.


காஸாவை பற்றி விவாதிப்பதன் மூலமாகத் தொடங்கி, போரைத் தூண்டிய இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களை பிரான்ஸ் “தெளிவாகக் கண்டிக்கிறது” என்று மக்ரோன் கூறினார். ஹமாஸ் ஆயுதக்குழு அன்று நடத்திய முன்னறிவிப்பில்லாத எல்லை தாண்டிய தாக்குதலில் சுமார் 1,200 பேரைக் கொன்றது. மேலும், அவர்கள் 240 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்தனர்.


“நாங்கள் இஸ்ரேலின் வலியைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அவர்களின் எண்ணத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். பயங்கரவாதம் என்றால் என்னவென்று பிரான்சுக்கு தெரியும்,” என்று கூறியவர், ஆனால் காஸாவில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு “எந்த நியாயமும் இல்லை” என்றார்.


“நம்முடைய கொள்கைகளின் காரணமாக, நம் அனைவருக்கும் இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், நாம் ஜனநாயக நாடுகளாக இருக்கிறோம். இஸ்ரேலின் பாதுகாப்புக்காகவும் அனைத்து உயிர்களும் முக்கியம் என்பதை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானது,” என்றும் அதிபர் மக்ரோன் தெரிவித்தார்.


பிரான்ஸில் அநேகமாக ஐரோப்பாவின் மிகப் பெரிய முஸ்லிம் சமூகமும், ஒரு பெரிய யூத சமூகமும் இருக்கலாம் என்றும் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் மற்ற பகுதிகள் யூத எதிர்ப்புப் பெருக்கத்தைக் கண்டு வருவதால், அனைத்து பிரெஞ்சு குடிமக்களும் யூத விரோதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும் எனவும் “பாலத்தீனர்களின் வலியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »