ஓஹியா மற்றும் இந்தல்கஸ்ஹின்ன ஆகிய இடங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதம் ஓஹியா புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயில் ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மலையக ரயில் பாதையை சீரமைக்க சுமார் 03 மணித்தியாலங்கள் தேவைப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி – நுவரெலியா வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் அந்த வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
பொல்கஹங்க பிரதேசத்தில் இந்த மரம் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக கண்டி – நுவரெலியா வீதி கெலிஓயா மற்றும் வெலிகல்ல பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பதுளை – கொழும்பு பிரதான வீதி பலாங்கொட சீலகம பகுதியில் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு மற்றும் பாறைகள் காரணமாக வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.