காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப்
பதிலடியாக இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்பப் பெறுவதாக பஹ்ரைன் கூறியுள்ளது.அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடான பஹ்ரைன் சமீபத்தில்தான் இஸ்ரேலுடனான தனது உறவைச் சுமூகமாக்கியது குறிப்பிடத்தக்கது.
பஹ்ரைனுக்கான இஸ்ரேலிய தூதர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், இஸ்ரேலுடனான பஹ்ரைனின் பொருளாதார உறவுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் நாடாளுமன்றம் கூறியிருக்கிறது.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் போர் வெடித்த பிறகு, முதன்முதலாக ஒரு அரபு நாடு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
2020-ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலுடன் பொருளாதார ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நான்கு அரபு லீக் நாடுகளில் பஹ்ரைன் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலங்களில் பஹ்ரைன்-இஸ்ரேல் உறவுகள் கணிசமாக வளர்ந்து வந்துள்ளன.
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் அரபு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான கோபம் அதிகரித்து வருகிறது. அரபு நாடுகளில் பாலத்தீனர்களுக்கு ஆதரவாக நடத்தப்படும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களின் மத்தியில் பஹ்ரைனின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.