சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
நாட்டுக்கு தரமற்ற இம்யூனோகுளோபுளின் (Immunoglobulin) தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஐசோலெஸ் பயோடெக் (Isolez Biotech) நிறுவனத்தை மையமாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அண்மையில் கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு தரமற்ற இம்யூனோகுளோபுளின் மருந்துகளை விநியோகித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய இரத்த பரிமாற்ற சேவையின் பணிப்பாளரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தரமற்ற மருத்துவ தயாரிப்புகளின் பயன்பாடு நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த வழக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது.