போலியான விசாக்களை பயன்படுத்தி மலேசியாவுக்கு செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு எல்லை பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குறித்த சந்தேக நபர்கள் கைதாகினர்.
சந்தேகநபர்கள் 41, 37 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து வருகை விசா மூலம் இலங்கை வந்துள்ளனர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியாவின் ஹைதராபாத்துக்கு செல்வதற்காக இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.
விமான நிலைய அனுமதி நடவடிக்கைகளுக்காக அவர்கள் சமர்ப்பித்த விசாக்கள் மற்றும் பிற ஆவணங்கள் குறித்து சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் அவற்றை சமர்ப்பித்துள்ளனர்.
அதன்போது, மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில், இந்த மலேசிய விசாக்கள் போலியானவையென உறுதி செய்யப்பட்டன.