(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பலம் வாய்ந்த நாடுகளின் ஒருதலைபட்ச செயற்பாட்டினால் இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் மூன்றாம் உலக மகா யுத்தமாக மாற்றமடையும் தன்மை காணப்படுகிறது.
உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இஸ்ரேல் - பலஸ்தீன மோதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை தீர்வு காண வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல்,பூகோள தாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
உக்ரைன் - ரஷ்யா மோதலுக்கு இணையாக தற்போது இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தீவிரமடைந்துள்ளது.
இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் அளவுக்கு பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
பலஸ்தீனம் விவகாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் இஸ்ரேல் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
இஸ்ரேல் காஸா மேற்கொண்ட தாக்குதலை தான் அறிந்திருக்கவில்லை என்று பாலஸ்தீன் பிரதமர் குறிப்பிடுகிறார். இது நான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அறியாமல் இருந்ததற்கு சார்பாக உள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலினால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளார்கள். மரண ஓலங்கள் தீவிரமடைந்துள்ளன.
உலக நாடுகளின் பார்வை தற்போது வேறுப்படுத்தப்பட்டுள்ளன. பலம் வாய்ந்த நாடுகள் ஒருதலை பட்சமாக செயற்படும் போது இந்த பிரச்சினை மூன்றாம் உலக மகா யுத்தமாக மாற்றமடையும்.
இஸ்ரேல் - பலஸ்தீன மோதலுக்கு தீர்வுகாண ஐக்கிய நாடுகள் சபை விசேட கவனம் செலுத்த வேண்டும்.
சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் இரு நாட்டையும் பிரிக்க வேண்டும். எதிர்காலத்தில் போர் சூழல் தோற்றம் பெறாத அளவுக்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட வேண்டும் என்றார்.