Our Feeds


Sunday, October 29, 2023

Anonymous

ஜனாதிபதியின் நடத்தையினால் மிகவும் கவலையடைந்துள்ளோம் - SLPP பொதுச் செயலாளர்.

 



பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் தனக்கு வழங்கிவரும் ஆதரவை ஜனாதிபதி மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளார். அதன் முக்கியத்துவத்தை அவர் கருத்தில் கொள்ளவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.


கேள்வி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் நீங்கள் சமீபத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ளீர்கள் - உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் - சுகாதார அமைச்சரரை மாற்றியமை தொடர்பில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை ரமேஸ் பத்திரன ஒரு மருத்துவர் அவர் இன்னும் சிறப்பாக செயற்படுவார் என நான் தெரிவித்திருக்கின்றேன் நாங்கள் அவருக்கு பாராட்டை தெரிவித்துள்ளோம்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு குறைந்தளவு அமைச்சுபொறுப்புகளே உள்ளன என்பதே எங்கள் கரிசனை ஆனால் எங்கள் கட்சியை சேர்ந்த 100க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனக்கு வழங்கியுள்ள பலத்தை ஜனாதிபதி கருத்தில் கொள்ள தவறியுள்ளார்.

கேள்வி - உங்கள் கட்சியின் கரிசனைகளை ஜனாதிபதியிடம் தெரிவித்தீர்களா?

பதில் - நான் ஞாயிற்றுக்கிழமை அவருடன் பேசினேன் ரமேஸ் பத்திரனவிற்கு சுகாதார அமைச்சு பதவியை வழங்குவது குறித்து எங்களிற்கு எந்த பிரச்சினையுமில்லை என நான் அவரிடம் தெரிவித்தேன் அதேவேளை ரமேஸ் பத்திரன இதுவரை காலமும் வகித்த பதவியை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.இல்லாவிட்டால் அது எங்களிற்கு பிரச்சினையாகிவிடும்.இதுவே எனது கரிசனை .

ஏனைய கட்சிகள் குறித்து அக்கறை காட்டப்படுகின்றது பொதுஜனபெரமுன குறித்து அக்கறை காட்டப்படவில்லை என பொதுமக்களும் கருதுவார்கள்.

கேள்வி - அமைச்சரவை மாற்றம் குறித்து உங்கள் கட்சிக்கு முன்கூட்டியே தெரியுமா?

பதில் - எங்களுக்கு அமைச்சரவை மாற்றம் குறித்து தெரியும். இரண்டு கிழமைக்கு முன்னரே கெஹெலிய ரம்புக்வெலவை பதவி விலகுமாறு  ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தார். ரம்புக்வெல அதற்கு இணங்கியிருந்தார்.

ரமேஸ் பத்திரனவை சுகாதார அமைச்சராக பதவி வகிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்  ஆனால் அவர் அதனை நிராகரித்தார் - அதனால் அது தாமதமானது. அவரை மூன்று தடவைகள் கேட்டார் அவர் அதனை நிராகரித்தார்.

எனினும் இறுதியில் அவர் இணங்கினார் ஜனாதிபதி சீனா செல்லவேண்டியிருந்ததால் இந்த விடயம் தாமதமானது.

எனினும பின்னர் பத்திரனவின் அமைச்சு பதவி மகிந்த அமரவீரவிற்கு வழங்கப்பட்டதாக நாங்கள் அறிந்தோம் அதுவேஎங்கள் கரிசனைக்குரிய விடயம்.

கேள்வி - கட்சியின் கரிசனைகள் குறித்து ஜனாதிபதியின் பதில் என்ன?

பதில் - ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் நான் ஜனாதிபதியின் செயலாளருடன் பேசினேன்  அவர் ஜனாதிபதியுடன் பேசினார் ஜனாதிபதி எங்கள் கரிசனைகளை ஏற்றுக்கொண்டார். எனினும், மறுநாள் காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றது.

கேள்வி - எனினும் தனது அமைச்சு பதவியின் கீழ் வரும் சில பொறுப்புகளை எடுத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு வழங்கியுள்ளனர் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளாரே?

பதில் - எங்கள் கட்சியின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவேண்டும் என்பது குறித்து எங்கள் மத்தியில் ஒருவகை புரிந்துணர்வு காணப்பட்டது.

நாங்கள் ஆரம்பத்தில் ஜனாதிபதியை கேட்டவேளை அவர் அனைத்து கட்சி கூட்டத்தின் பின்னர் நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

கேள்வி - ஆகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பதுதான் உங்கள் கரிசனையா?

பதில் - விடயம் என்னவென்றால் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு120 பேரின் ஆதரவு உள்ளது இதில் 100 பேர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆகவே நீங்கள் பொதுஜனபெரமுனவின் ஆதரவை மிகவும் சாதாரணமாக கருதியுள்ளீர்கள் என்பதே இங்கு  விடயமாக உள்ளது.

கேள்வி - அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியுடனான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா?

பதில் - அமைச்சரவை மாற்றம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைவில்லை. மிகவும் கவலையடைந்துள்ளோம்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »