அமைச்சரவை மாற்றத்தை கடுமையாக விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியின் தவறான முடிவு இது என தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி இந்த விடயத்தில் தவறான முடிவினை எடுத்துள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹெலிய ரம்புக்வெலவை மாற்றியது முற்றிலும் தவறான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
கெஹெலியவிற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன என குறிப்பிட்டுள்ள அவர் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் சில நடவடிக்கைகளை எடுப்பது சரியானதா என்பது குறித்து ஜனாதிபதி சிந்தித்திருக்கவேண்டும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய சுகாதார அமைச்சராக ரமேஸ் பத்திரனவை நியமிப்பது குறித்த கட்சியின் அதிருப்தியை ஏற்கனவே ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அமைச்சர் பதவிகளை வழங்கியமை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜனபெரமுனவை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அவர் இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி பொதுஜனபெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்களிற்கு அதனை வழங்குவது தவறான முடிவு நாங்கள் இதனை கடுமையான எதிர்க்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்