நிமல் லான்சாவின் சவாலை ஏற்று அவருடன் விவாதத்துக்கு சென்றால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நிச்சயம் தோல்வி அடைவார் என்று நாமலின் சகாவும், இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த தெரிவித்தார். அதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிப்பதைவிடுத்து, முதுகெலும்பிருந்தால் பாதீட்டை எதிர்த்து எதிரணியில் அமருமாறு நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டு அணியினருக்கு நிமல் லான்சா சவால் விடுத்திருந்தார். அத்துடன், நாமல் ராஜபக்சவை பகிரங்க விவாதத்துக்கும் அழைத்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சனத் நிஷாந்த,
'நிமல் லான்சாவின் சவாலை ஏற்று நாமல் ராஜபக்ச விவாதத்துக்கு செல்வார் என நான் நம்பவில்லை. அவ்வாறு சென்றால் நாமல் ராஜபக்ச தோல்வி அடைவது உறுதி. நிமல் லான்சா என்பவர் ஹெரோயின், கஞ்சா, குடு பற்றியே பேசுவார். அவை பற்றிதான் அவருக்கு நன்கு தெரியும். ஆனால் நாமல் ராஜபக்சவுக்கு விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியே தெரியும். அவருக்கு போதைப்பொருட்கள் பற்றி தெரியாது. ஆகவேதான் விவாதத்துக்கு சென்றால் தோல்வி அடைவார் எனக் கூறுகின்றேன்.' – என்றார்.