பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை குறிப்பிடுவது குறித்து பதிவாளர் நாயக திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
குறித்த சான்றிதழ்களில் தமது இனத்தை குறிப்பிடுவது தொடர்பாக, சுற்றுருபத்தினை வெளியிட பதிவாளர் நாயக திணைக்களத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரஜா உரிமை இல்லாத சமூகமாக இருந்த போது, இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற அடையாளமே தமக்கான அங்கீகாரமாக இருந்தது எனவும், தமது இனத்தின் அடையாளத்தை தீர்மானிப்பதற்கு மூன்றாம் தரப்பினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது எனவும் கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார் .
1948 ஆம் ஆண்டு பிரஜா உரிமை இன்றி வாழ்ந்த தமது சமூகம், கிட்டத்தட்ட 40 வருட போராட்டங்களுக்கு பிறகு இந்திய வம்சாவளியினர் என்ற அங்கீகாரத்துடன் பிரஜா உரிமை பெற்றது.
எனவே இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, 'இலங்கை தமிழர்' என அடையாளப்படுத்த முற்படுவது அந்த மக்களின் அடையாளத்தை மறைக்கும் ஒரு செயற்பாடாகும் என கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.