பல்வேறான நிறங்களைக் கொண்ட கற்களை, மாணிக்கக் கற்கள் என காண்பித்து, பலரை ஏமாற்றிய குற்றஞ்சாட்டின் கீழ் தேடப்பட்டுவந்த முதிய ஜோடி, ஹொரண நகரில் சுற்றித் திரிந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 10 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், நாட்டின் பல பாகங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான பெண், படபொல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவர் எனவும், சந்தேகநபர் மத்தல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு சந்தேக நபர்களிடமிருந்து வெவ்வேறு போலி கற்களும் கைப்பற்றப்பட்டன.
இவ்விரு சந்தேகநபர்களின் மோசடியில் சிக்கிய நால்வர் ஹொரண பொலிஸில் ஏற்கெனவே முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.