கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர், 3 லட்சத்து 33 ஆயிரம் பேர் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதலில் காஸாவில் 450 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சனிக்கிழமை முதல் நடைபெற்று வரும் இஸ்ரேலிய வெடிகுண்டு தாக்குதல்களில் 447 குழந்தைகள், 248 பெண்கள் உட்பட 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் காஸாவில் உள்ள அல்- ஷிஃபா மருத்துவமனை திணறி வருகிறது. குறைந்த எரிபொருளே இருப்பதால் உயிர் காக்கும் சிகிச்சைகள் மட்டும் வழங்கப்படுகின்றன.
ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, தாக்குதலை தடுக்கத் தவறிவிட்டதாகத் தெரிவித்தார்.
“நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் நாங்கள்தான் பொறுப்பு. சனிக்கிழமை காலை, காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் அதைக் கையாளவில்லை,” என்றார்.
காஸாவில் பணயக் கைதிகளாக உள்ளவர்கள் குறித்துப் பேசிய அவர், “போரின் விலை அதிகம் மற்றும் கடினமானது, சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்டுக் கொண்டு வர நாங்கள் அனைத்தையும் செய்வோம்,” என்று கூறினார்.
இந்நிலையில், தற்போது தாங்கள் ஹமாஸ் அமைப்பின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது.