Our Feeds


Friday, October 6, 2023

Anonymous

ஒவ்வொரு முஸ்லிம்களும் பெயரில் கூட முஹம்மத் என சேர்க்கும் அளவு நபியை நேசிக்கிறோம் - இந்திக்க தொடவத்த கைது வழக்கில் நீதிமன்றில் நடந்தது என்ன? முழு விபரம்.

 



குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் கடுமையாக நிந்தனை செய்த இந்திக்க தொட்டவத்த என்ற ஜோதிடர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் 20ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு  மாலிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம  இன்று உத்தரவிட்டார்.


கணனி குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட B ரிப்போர்ட்டில் 2007 ஆம் ஆண்டு கணனி குற்றச் சட்டத்தின் பிரிவு 6 (1) படியும் இலங்கை தண்டனைச் சட்ட கோவையின் பிரிவு 291 (A) என் படியும் வழக்கு தாக்கல் செய்து விசாரணை முன்னெடுப்பதாக கூறினர் . 


இந்திக்க தொடவத்த சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி சுசந்த மேற்குறிப்பிட்ட தவறுகள் பிணை வழங்கப்படக்கூடிய தவறுகள் என்றும், இந்திக்க தொட்டவத்த கண் தெரியாத ஒருவர் என்றும் மேலும் அவர் குறிப்பிட்ட விடயம் எதுவும் தவறான விடயம் அல்ல அது ஒரு இலக்கிய ரீதியான கருத்து என்றும் குறிப்பிட்டு இந்திக்க தொட்டவவத்தவுக்கு பிணை வழங்குமாரு விண்ணப்பத்தை முன் வைத்தார்.


முஸ்லிம் சமூக முறைப்பாட்டாளர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், அன்வர் முஹம்மத் மற்றும் எம்.கே.எம் பர்ஸான் ஆகியோர் ஆஜராகி பிணை வழங்குவதற்கு எதிராக நீண்டதொரு சமர்ப்பணத்தை செய்தனர்.


பிணை சட்டத்தின் பிரிவு 14 இன் படி மக்கள் கலக்கமடைவர்கள் என்பதை அடிப்படையாக வைத்து பிணை வழங்கக் கூடாது எனவும் வாதிட்டனர்.  மேலும் குறிப்பிட்ட தவறானது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், இவ்வாறு இனங்களுக்கு இடையில் முறுகள் நிலையை ஏற்படுத்துவது போல் கருத்துக்களை பகிர்வது நாட்டின் நல்லிணக்கத்தை பாதிக்கும் என்றும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக முறையாக சட்டம் பிரயோகிக்கப் படாவிட்டால் மக்களுக்கு நீதித்துறை மீதும் சட்ட ஒழுங்கு மீதும் இருக்கும் நம்பிக்கை இல்லாது போய்விடும் என்றும் விவாதித்தனர். 


மேலும் முஸ்லிம்களாகிய நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது எந்த அளவுக்கு அன்பு கொண்டுள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டினர். எனவே இவ்வாறான கருத்துக்கள் முஸ்லிம்களுக்கு மன உளைச்சல் மற்றும் கவலையை ஏற்படுத்தும் என்றும் நீதவானுக்கு எடுத்துரைத்தனர். 


இதனை கருத்திற் கொண்ட  நீதவான் ஒவ்வொரு முஸ்லிம் ஆண்களின் பெயர்களிலும் முஹம்மத் என்ற பெயர் வருகிறது என்றும் அதனால் முஸ்லிம் மக்கள் எந்த அளவு முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு கொண்டிருக்கிறார்கள் என்றும் புலப்படுவதாகவும் மேலும் இந்திக் தொட்டவத்த கூறிய கருத்தை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது,  இன்னொரு மதத்தை இழிவுபடுத்தும் உரிமை அவருக்கு இல்லை எனக்கூறி இந்திக்க தொட்டவத்தவை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார். 


மேலும் கணனி குற்றத்தடுப்பு பிரிவினருக்கு இந்தத் தவறுகள் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் தவறாக கருதப்பட முடியுமா? என சட்டமா அதிபரின் ஆலோசனையை எடுத்து அடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாரும் கட்டளையிட்டார்.


மேலும் இந்திக்கத் தொட்டவத்த பேசிய அந்தக் காணொளி பதிவின்   சி.டி யை அடுத்த வழக்கு தினத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கணனி குற்றத்தடுப்பு பிரிவுக்கு கட்டளையிட்ட நீதிபதி அவர்கள், இவ்வாறான இனவாத நடவடிக்கைகளின் போது சரியான முறையில் சட்ட ஒழுங்கு செயல்படாவிட்டால் மக்கள் கலக்கம் அடைவார்கள் என்றும் தெரிவித்தார்.


இவ்வழக்கு விசாரணையானது சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலதிகமாக வாத பிரதிவாதங்களுடன் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »