ஆர்.ராம்
உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம், நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு பதிலாக அலி சாஹிர் மௌலானாவை நியமிக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நஸீர் அஹமட்டினை நீக்கியமைக்கு எதிராக அவரால் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் முடிவில், நஸீர் அஹமட் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நிக்கப்பட்டமை சரியானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், அவரது பாராளுமன்ற பதவிநிலை வறிதாகவுள்ளமை உள்ளிட்ட அடுத்தகட்ட விடயங்கள் சம்பந்தமாக கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சுப் பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எச்சரிக்கையாக இருக்கும். மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம், நசீர் அஹமட்டின் பாராளுமன்ற பதவி வறிதாகிறது.
ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலுள்ள அலி சாஹிர் மௌலானா பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ளார்.
இதற்கான கடிதம் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் என்ற வகையில் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.