பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸாவை 13-வது நாளாக இஸ்ரேல் இராணுவம் தாக்கி வருகிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், பலஸ்தீனத்துக்கு அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, மோதலை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், காஸா மீது தொடர்ந்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த அரபு தலைவர்கள், ஜோர்தானில் பைடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை இரத்து செய்தனர்.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் இன்று மாலை அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின் போது, போரில் இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை வழங்குவது குறித்து ரிஷி சுனக் ஆலோசிக்கவுள்ளார்.