மன்னார் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு
சபைக்கு சொந்தமான காணிக்கு அருகில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது.இன்று சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக அப்பகுதியில் உள்ள மரங்கள், புதர்கள் உட்பட அனைத்திலும் தீ பரவிய நிலையில், அதிக காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதுடன், அருகிலிருந்த காடுகளுக்கும் தீ பரவியது.
இதனை தொடர்ந்து அருகிலிருந்த பொது மக்கள் மற்றும் கடற்படையினரின் தொடர் முயற்சியினால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் தீ பரவல் காரணமாக அப்பகுதியில் காணப்பட்ட ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உட்பட பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் உரிய தீயணைப்பு பிரிவு காணப்படாமையினால் வவுனியா தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் அனைத்தும் எரிந்து அணையும் வரை தீயணைப்பு பிரிவு சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர் நிருபர்