எம்.எஸ்.தீன்
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் முதல் ஏனைய துறைத் தலைவர்கள் வரை தூக்க நிலையில் சோம்பிப் போயிருப்பதாகவே தென்படுகின்றது. இன்று முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கும் போக்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. திருகோணமலையில் இந்த நிலை கூடுதலாகக் காணப்படுகின்றது.
திருகோணமலை – புல்மோட்டை அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியை அபகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை தடுப்பதற்கு எந்தவொரு அரசியல் கட்சிகளும், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை. காணிகள் பறிக்கப்படும் போது வெறும் அறிக்கைகளை மாத்திரம் வெளியிடும் வழமையான நடவடிக்கைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இதேவேளை, இஸ்லாமிய மார்க்கத் தலைவர்களும், ஏனைய துறைத் தலைவர்களும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற இந்த அநியாயத்தைப் பற்றியும், இது விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மௌனம் காப்பதையும் கண்டிக்காதுள்ளமையும் முஸ்லிம் சமூகத்தின் மீது அவர்களுக்கு அக்கறையில்லை என்பதனை தெளிவுபடுத்துவதாக இருக்கின்றது.
கடந்த 22.09.2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் புல்மோட்டை இலக்கம் 01 கிராம அலுவலர் பிரிவில் உள்ள 6 முஸ்லிம் குடும்பங்களுக்கு சொந்தமான விவசாயக் காணிகளை, பலவந்தமாக டோசர் இயந்திரங்களை கொண்டு அபகரிக்கும் நடவடிக்கைகளில் புல்மோட்டைப் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஈடுபட்டுள்ளார்.
இதனையறிந்த காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் அத்துமீறி சென்று இத்தகைய அபகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதை நிறுத்துமாறும், காணிக்கான ஆவணங்கள் தம்மிடம் உள்ளன எனவும், தாங்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்துவரும் காணிகளை விட்டு வெளியேறுமாறும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த பௌத்த பிக்கு இந்த பகுதி பௌத்த விகாரைக்கு சொந்தமானது என்று தெரிவித்ததோடு, இந்தக் காணி வர்த்தமானியில் பௌத்த விகாரைக்கான இடம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். புல்மோட்டை அரிசிமலைப் பகுதியில் புதிதாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அமைக்கப்படும் விகாரைகளுக்கு அங்குள்ள சிறுபான்மையினரின் காணிகளை பௌத்த விகாரைக்குரிய காணிகள் என்று அபகரித்துக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இவ்வாறு நடைபெறும் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் பல தடவைகள் தமது கடும் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளார்கள்.
அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அரசாங்கத்திற்கும், மாவட்ட அரசாங்க அதிபருக்கும் பல தடவைகள் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதே வேளை, காணி அபகரிப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களின் காணிகளை கபளீகரம் செய்துகொள்வதற்காக கடந்த காலங்களில் இவை வனப்பாதுகாப்புக்குரிய காணி என்றும், புனித பூமி என்றும், இதற்காக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்றும்கூறப்பட்டன. ஆனால், காணிகளை பறிகொடுத்த முஸ்லிம்களுக்கு எந்தவொரு மாற்றுத் தீர்வும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.
முஸ்லிம் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முன்வரவுமில்லை. மறுபுறத்தில் முஸ்லிம்களின் காணிகளை அபகரித்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தினாலும், அதிகாரிகளினாலும் இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்பதனையே புல்மோட்டை பிரதேசத்தில் தற்போது நடைபெற்ற காணி அபகரிப்பு நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது.
சிறுபான்மையினரின் காணிகளை பல்வேறு பெயர்களில் சூறையாடி, அக்காணிகளில் சிங்களவர்களை குடியேற்றிக் கொண்டிருக்கும் நடவடிக்கைகள் இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் காணிகளை மீட்டுத் தருவோம் என்று முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்களும் பல தடவைகள் வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் அவற்றை நிறைவேற்றும் எந்தவொரு செயற்பாட்டையும் அங்குள்ள மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளும், முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொள்ளவில்லை.
இப்போது முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கும் அடிக்கடி விஜயம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த விஜயங்களின் போது கூட முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி பேசப்படுவதில்லை.
தமது கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து கட்சியின் கிளைகளை புனரமைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு விருந்துபசாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்வரும் வருடம் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாமென்று எதிர்வு கூறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெற வேண்டுமென்ற விருப்பத்தை கொண்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போன்று நடக்கக் கூடிய சாத்தியங்கள் குறைந்து கொண்டிருக்கின்றன. அதனால், சில வேளைகளில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு திகதி அறிவிக்கும் நிலைப்பாட்டைக் கூட ரணில் விக்கிரமசிங்க எடுக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எந்த தேர்தல் நடைபெற்றாலும் தங்களின் வாக்குப் பலத்தைக் காட்டுவதற்குரிய நடவடிக்கைகளை முஸ்லிம் கட்சிகள் மேற்கொண்டிருக்கின்றன. இதனால்தான்; கிழக்கு மாகாணத்திற்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றார்கள்.
கட்சிக்கான செல்வாக்கை நிரூபித்துக் காட்டும் போதுதான் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொள்ளலாம். அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்ளலாமென்று முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் திட்டமிட்டுள்ளார்கள்.
முஸ்லிம்களின் காணிகளை மீட்டுத் தருவோம் என்று அவர்கள் மீண்டும் சொல்லி வாக்குகளை வேட்டையாடப் போகின்றார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இவ்வாறுதான் வாக்குறுதி வழங்கினார்கள். எந்த வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
ஆகவே, பொது மக்கள் தான் விழிப்பாக இருக்க வேண்டும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களில் யாருடைய கைகள் சுத்தமாக இருக்கின்றதோ அவர்களை மாத்திரமே வெற்றியடையச் செய்ய வேண்டும்.