கடந்த சனிக்கிழமை தொடங்கிய ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் அரபு நாடுகளின் அவசர கூட்டம் கூடுகிறது.
இந்த அமைப்பின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
“தீவிரமடைந்து வரும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களையும் அதனால் அங்கு வசிக்கும் அப்பாவி காஸா மக்கள் படும் துன்பங்களை குறித்தும், அவர்களின் சீர்குலைந்து வரும் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து முடிவெடுக்கவும் நமது அமைப்பின் செயற்குழு, உறுப்பினர் நாடுகளின் அமைச்சர் பொறுப்பில் உள்ள தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது”
நீண்ட காலத்திற்கு பிறகு சவுதி அரேபியா, இஸ்ரேலுடன் ஒரு சுமூக உறவுக்கான முயற்சிகளை சமீபத்தில்தான் மேற்கொண்டு வந்தது. ஆனால், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் மீது போரை அறிவித்து காஸா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்த தொடங்கியதும், அந்நாட்டுடன் அனைத்து பேச்சுவார்த்தையையும் நிறுத்தி வைத்திருக்கிறது சவுதி அரேபியா.