பாடாசாலை மைதானத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த 3 மாணவர்கள் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பளை கல்வி வலயத்துக்க உட்பட்ட மாவத்துர கலைமகள் தமிழ் வித்தியாலய பாடாசாலை மைதானத்திலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பியுள்ள நிலையில், தரம் 6 இல் பயிலும் 11 வயதான மேலுமொரு மாணவன் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றார்.
பாடசாலை நேரத்தில், மேற்படி மூன்று மாணவர்களும் வெளியே வந்த போது பந்து போன்ற ஒன்று கிடந்துள்ளது. அதனை ஒருவர் உதைத்தைப்போது அந்த பொருள் திடீரென வெடித்துள்ளது.
இதன்போது உதைத்த மாணவனின் பாதணி சேதமடைந்ததோடு அவரின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது, .
விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் வெடி பொருள் ஒன்றே வெடித்து சிதறியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகிறார்.
இச்சம்பவம் இடம்பெற்று 01:35 மணியளவில் பாடசாலையினால் தனக்கு வழங்கப்பட்ட தொலைபேசி அழைப்பின் பிரகாரம், குறித்த இடத்திற்கு சென்ற போது பாடசாலையில் கரும் புகை சூழ்ந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து பாடசாலை அதிபர் கணேசன் புவனேஸ்வரியிடம் கேட்டபோது, வெடி விபத்து குறித்து யாரிடமும் கூற வேண்டாம் என பொலிஸார் கூறியதாக கூறினார்.
இது தொடர்பாக கம்பளை வலயக் கல்விப் பணிப்பாளர் நிஹால் அழககோனிடம் வினவ முயன்றபோதும் முயற்சி பயனளிக்கவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.