மாலம்பே அரங்கல பிரதேசத்தில் 30 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கொன்றை விற்க முயன்ற சிற்பியொருவர் பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையினரால் வலம்புரியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை வலன பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக்க வீரசிங்கவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேக நபர் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கண்டி பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு சொந்தமான குறித்த வலம்புரியை விகாரையின் உரிமையாளர் குறித்த சிற்பி மூலமாக விற்பனை செய்ய முற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக வீரசிங்க தெரிவித்தார்.
குறித்த வலம்புரி சங்கை கொள்வனவு செய்யும் முகவர் போல செயற்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கைக்கு பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மீரிகம விமானப்படை தளத்தின் புலனாய்வு அதிகாரிகளும் உதவினர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் நேற்று வலம்புரியுடன் மாலம்பே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.