Our Feeds


Saturday, September 23, 2023

Anonymous

ஆறு மாத கைக் குழந்தையை கடித்துக் குதறிய எலிகள் – பெற்றோர் கைது



ஆறு மாதங்களேயான கைக்குழந்தையை எலிகள் கடித்து குதறியதில் காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, குழந்தையின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதியில் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். 


இவர்களுக்கு 2 குழந்தைகளுடன் பிறந்து 6 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. டெலானியா துர்மன் எனும் அவர்களின் மற்றொரு உறவுக்கார பெண்மணியும் அவர்களுடன் வசித்து வந்தார். வேறு ஒரு தம்பதியினரும் இவர்களுடன் வசித்து வந்தனர். 


சில நாட்களுக்கு முன்பு, தனது 6 மாத ஆண் குழந்தையின் உடலெங்கும் காயங்கள் இருப்பதாக எவான்ஸ்வில் அவசரசேவைக்கு டேவிட் தகவலளித்தார். 


இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு பொலிஸார் விரைந்து வந்து பார்த்தபோது அக்குழந்தை தலை மற்றும் முகத்தில் 50 இடங்களில் காயங்களுடன் உடல் முழுவதும் ரத்த களரியாக காணப்பட்டான். 


வலது கரத்தில் அனைத்து விரல்களின் தலைபாகங்களிலும் சதை முழுவதுமாக காணாமல் போயிருந்தது. ஒரு சில விரல்களில் உள்ளேயிருக்கும் எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு காயங்கள் இருந்தன. அக்குழந்தை உடனடியாக இண்டியானாபொலிஸ் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரத்தம் செலுத்தப்பட்டது. 


அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் விளைவாக குழந்தை உயிர் பிழைத்ததுடன், காயங்களுக்கான காரணங்கள் குறித்து பொலிஸார் மேற்கொண்ட ஆய்வில் அக்குழந்தையை ஒன்றுக்கும் மேற்பட்ட எலிகள் கடித்திருப்பது தெரியவந்தது. 


வீடு முழவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை வளர்ப்பதில் பொறுப்பற்ற முறையில் இருந்ததற்காகவும் பராமரிக்கும் கடமையில் தவறியதற்காகவும் அத்தம்பதியினரையும் அவர்களின் உறவுக்கார பெண்மணியையும் பொலிஸார் கைது செய்தனர். 


சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் மீது அந்நாட்டு சட்டப்படி சம்பந்தபட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை சிகிச்சை முடிந்து அந்த குழந்தை, குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளான். 


தேசிய குழந்தைகள் நலனுக்கான துறையின் பொறுப்பில் அந்த வீட்டில் உள்ள ஏனைய இரு குழந்தைகளும் தற்போது அரசு பொறுப்பில் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »