Our Feeds


Friday, September 15, 2023

SHAHNI RAMEES

'ஷி யான் 6' சீனக்கப்பலின் வருகைக்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை - வெளிவிவகார அமைச்சர்

 

(நா.தனுஜா)

சீன ஆய்வுக்கப்பலான 'ஷி யான் 6' இன் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், இவ்விடயங்கள் இராஜதந்திர ரீதியிலேயே கையாளப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர வளைய நாடுகள் அமைப்பின் 23 ஆவது அமைச்சர்கள் மட்டக்கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10, 11 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. 

இக்கூட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 

இதன்போது 'ஷி யான் 6' என்ற சீன ஆய்வுக்கப்பலின் வருகை மற்றும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையே நிலவும் இராஜதந்திர மோதல்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதன்படி, சீன ஆய்வுக்கப்பலான 'ஷி யான் 6' இன் வருகையுடன் தொடர்புடைய விவகாரங்களில் தாம் (வெளிவிவகார அமைச்சு) நேரடியாகத் தொடர்புபடவில்லை என்று குறிப்பிட்ட அவர், அக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

அதேவேளை, 'ஷி யான் 6' கப்பலின் வருகை தொடர்பில் வெளியான செய்திகளை அடுத்து இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையே நிலவும் முறுகல் நிலையை இந்து சமுத்திர வளைய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மட்டக்கூட்டத்தின்போது எவ்வாறு கையாளப்போகின்றீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, எந்தவொரு நாடும் இவ்வாறான விடயங்களை இராஜதந்திர ரீதியிலேயே கையாளும் என்று குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நிலவும் சவால்களை அடையாளங்காண்பதற்கும், பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த அமைச்சர்கள் மட்டக்கூட்டம் பங்களிப்புச்செய்யும் என்று சுட்டிக்காட்டிய அவர், எதுஎவ்வாறெனினும் நாட்டின் உள்ளக நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே செயற்படுவோம் என்றும் உறுதியளித்தார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »