(எம்.ஆர்.எம்.வசீம்)
நிபா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டு பிள்ளைகள் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பீ. விஜேசூரிய தெரிவித்தார்.
நிபா வைரஸ் தொற்றுக்குள்ளான பிள்ளைகள் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் செய்தி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நிபா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டு பிள்ளைகள் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை.
அத்துடன், இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக சந்தேகிக்கப்படும் எவரும் இலங்கையில் எந்த பிரதேசத்திலும் கண்டுபிடிக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
அத்துடன் நிபா வைரஸ் நாட்டுக்குள் வந்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்கிறது. அதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனால் சிறுவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்காக சிகிச்சை பெற்றுக்கொள்ள ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு வருவதற்கு எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
அதேபோன்று சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு யாரும் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றார்