பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு வரவில்லை என்றும் விமான நிலையத்துக்கு வந்துவிட்டு அங்கிருந்து மீண்டும் அவரது நாட்டுக்கு திரும்பிச் சென்றுவிட்டதாகவும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அவ்வாறு, பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தால், அவருடன் பேசிய விடயங்கள், அந்நாட்டு அரசாங் கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இணக்கப்பாடுகளை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், பிரான்ஸ் ஜனாதிபதி கடந்த வாரம் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார். நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவையென்றும் பொருளாதார நெருக்கடிக்கு பிரான்ஸிடமிருந்து உதவி கிடைக்குமென்று அரசாங்கம் பாரிய பிரசாத்தை முன்னெடுத்து வருகின்றது. உண்மையில் குறிப்பிடுவதனால் பிரானஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வரவில்லை. அவர் விமான நிலையத்துக்கு மாத்திரமே வருகைத் தந்திருந்தார். விமான நிலையத்துக்கு வந்த நபரொருவர் இலங்கைக்கு வந்தவராக கருதப்படமாட்டார்.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை இடைநிலை பயணிகளாகவே கருதப்படுவார்கள். இந்தியா, மாலைதீவு போன்ற நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கைக்கு வந்து விமானத்தினூடாக அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் செல்வார்கள். அவர்கள் இலங்கைக்கு வந்த பயணிகளாக கருதப்படமாட்டார்கள். தற்போதைய காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து குறிப்பிடுகிறது.
சுற்றுலா பயணிகளின் கணக்கெடுப்பில் இடைநிலை பயணிகளையும் சேர்த்தே கணக்கெடுப்பது போன்றே தெரிகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி தனது விமானத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கிய சந்தர்ப்பத்தில், விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவித்து பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
உண்மையாக பிரான்ஸ் ஜனாதிபதி நாட்டுக்கு இராஜதந்திர பயணம் மேற்கொண்டிருந்தால், இரு நாட்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள், இணக்கப்பாடுகள் என்பவற்றை மக்களுக்கு பகிரங்கப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவால் விடுக்கிறேன்.