பாதாள உலகக் குழுவின் பிரபல தலைவனாக கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவ மற்றும் முக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கருதப்படும் கோத்தா அசங்க ஆகியோர் பாதுகாப்புப் படையினரால் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதாக இலங்கை புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுக்கள் இருவரையும் கைது செய்வதற்காக தேடும்போது, அவர்கள் 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மன்னாரிலிருந்து படகு மூலம் தப்பிச் சென்றதாகவும் அந்தப் புலனாய்வு அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு தப்பிச் சென்ற கணேமுல்ல சஞ்சீவ தனது சகாவான கோத்தா அசங்கவுடன் இணைந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் மற்றும் கொலைகளை செய்வதற்கு அவர்களின் ஏனைய சகாக்களை வழிநடத்தியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பாதுகாப்புப் படையினர் இருவரையும் கைது செய்ததற்கான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் கிடைக்கவில்லை என்று உளவுத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.