நாளை குருந்தூர் மலையில் இடம்பெறும் பொங்கல் வழிபாட்டை தடுக்க எவருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று முல்லைத்தீவு நீதிமன்று இன்று கட்டளையிட்டுள்ளது.
பதற்றம் ஏற்படலாம் என்று பொலிஸார் முன்வைத்த தடையுத்தரவு கோரிக்கையையும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளது.
குருந்தூர் மலையில் நாளை பொங்கல் இடம்பெற்றால் இரண்டு குழுவினருக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு, அந்த கருத்து முரண்பாடு உணர்ச்சிகரமான விடயங்கள் என்பதால் மதக்கலவரமாக உருவாகி உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடும். அந்த இடத்தின் அமைவிடத்தின் அடிப்படையில் அவ்வாறான ஒரு கலவரத்தை தடுப்பதற்கு மிகவும் கடினமாகும் என தெரிவித்து குற்றவியல் நடைமுறை கோவை பிரிவு 106 (01)கீழ் முல்லைத்தீவு நீதிமன்றில் அறிக்கை ஒன்றை நேற்று தாக்கல் செய்து பொங்கல் வழிபாட்டுக்கு எதிராக தடை உத்தரவை கோரினர்.
ஆனாலும் புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது . என பொலிசாரின் தடையுத்தரவு கோரிக்கையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளது.
அத்தோடு பொங்கல் வழிபாட்டை விகாராதிபதி சாந்தபோதி தேரரோ அல்லது அவருடன் வரும் குழுவினரோ அருண் சித்தார்த் என்பவரோ அல்லது அவருடன் வரும் குழுவினரோ தடுக்க எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனவும் நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது.