Our Feeds


Sunday, August 6, 2023

Anonymous

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகிறார் சமல் ராஜபக்ஷ.

 



(லியோ நிரோஷ தர்ஷன்)


2024ம் ஆண்டு முதல் காலாண்டில்  ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் கருத்து முரண்பாடுகள் மேலோங்கியுள்ளன. 

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சமல் ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளக முரண்பாடுகள் மேலோங்கியுள்ளன.  

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அடுத்த தேர்தலில் போட்டியிட வைப்பதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதுடன், மக்களின் பொருளாதார எதிர்பார்ப்புகளையும் ஈடு செய்ய முடியும் என்று ஆளும் கட்சியின் ஒருதரப்பு கூறுகையில், அதனை நிராகரிக்கும் வகையில் 2024ஆம் ஆண்டு வரை மாத்திரமே தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் கலாநிதி ரஞ்சித் பண்டார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த கருத்து முரண்பாடுகளை தவிர்க்கும் வகையில் பல்வேறு  கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அது சாத்தியப்படாத நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடலை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மையப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கடந்த வாரத்தில் பஷில் ராஜபக்ஷ சந்தித்திருந்த போதிலும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலையா அல்லது பாராளுமன்ற தேர்தலையா முதலில் வைப்பதற்கு உத்தேசித்துள்ளீர்கள் என்று ஜனாதிபதியிடம் பஷில் ராஜபக்ஷ வினாவியிருந்த போதிலும், அதற்கும் உறுதியான பதிலை அளித்திருக்கவில்லை. எனினும் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளையும் பிளவுகளையும் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »