Our Feeds


Friday, August 4, 2023

News Editor

வாகன மோசடி :மூவர் கைது


 மோட்டார் சைக்கிளின் இயந்திர அடிச்சட்டகம் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும், மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினரே  நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து முச்சக்கரவண்டியொன்றை கொள்வனவு செய்துள்ளார். இவ்வாறு கொள்வனவு செய்தவர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனத்தின் புத்தகத்தை மாற்றுவதற்காகச் சென்றபோது வாகனத்தின் தகவல்கள் மற்றும் இதர ஆவண விடயங்களில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும், மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறையிட்டுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாகனத்தின் புத்தகம் போலியானது என்பது தெரியவந்தது. அத்துடன், மோட்டார் சைக்கிளின் இயந்திரக் குறியீடுகளை முச்சக்கரவண்டிக்கு மோசடியாகப் பாவித்துள்ளமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து நல்லூரைச் சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், வாகனத்தை விற்பனை செய்த கிளிநொச்சி நபர் கைதுசெய்யப்பட்டார். இவர் ஓர் இடைத்தரகர் என்று தெரியவருகின்றது.

 அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மருதங்கேணியைச் சேர்ந்த பிறிதொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபர்கள் மூவரும் நீதிமன்றில் நேற்று (03) முற்படுத்தப்பட்டதையடுத்து நல்லூரைச் சேர்ந்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஏனைய இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »