Our Feeds


Wednesday, August 16, 2023

SHAHNI RAMEES

சட்டத்தரணிகளுக்கு வாய்ப்பு : ஜனாதிபதி சட்டத்தரணிகள் தெரிவுக்கான விண்ணப்பம் கோரல்

 

2022/2023 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.



இலங்கை அரசியலமைப்பின் 33 (ஈ) சரத்துக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதோடு, 2021 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 2255/24 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகமைகளைக் கொண்டுள்ள இலங்கை பிரஜைகள் விண்ணப்பிக்கலாம்.



01. இலங்கை உயர் நீதிமன்றற்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாக இருத்தல்.

 

02. சட்டத்துறையில் சிறந்த வரவேற்பு மற்றும் தொழில்துறை திறன்களை வெளிக்காட்டியிருத்தல்.



03. இலங்கை சட்டத்தின் முன்னேற்றத்திற்கும் சட்டத்துறையில் நிபுணராகவும் தனித்துவமான மற்றும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருத்தல். 



04. இலங்கைக்குள் அல்லது வெளிநாட்டில் சட்டம் தொடர்பான சிறப்புத் திறனை வெளிப்படுத்தியிருத்தல்.



05. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை மீறாமல் நற் பண்பும் நற்பெயரும் கொண்டவராக இருத்தல்.



06. சட்டத்தின் ஆட்சி அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் அல்லது மட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு செயலிலும் ஈடுபடாமல் இருத்தல்.



07. உயர் நீதிமன்றத்தினாலோ அல்லது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினாலோ ஒழுக்காற்று உத்தரவுக்கு உட்படுத்தப்படாத ஒரு நபராக இருப்பதுடன், நீதிமன்றத்தினால் தொழில்சார் முறைகேடுகள் அல்லது தவறான நடத்தைகளுக்காக தண்டிக்கப்படாதவராக இருத்தல்.

 

08. குறைந்தபட்சம் ஐந்து வருட காலத்திற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வருமான வரி செலுத்துபவராக பதிவு செய்துகொண்டிருத்தல்.



சட்டம் மற்றும் சட்ட அமைப்புகள் பற்றிய புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை வெளியிட்டிருத்தல், தேசிய அல்லது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சட்டம் படித்திருத்தல், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சட்டம் கற்பித்தல் என்பன ஜனாதிபதி சட்டத்தரணிகளைத் தெரிவு செய்வதற்கான மேலதிக தகமைகளாக காணப்படும்.



விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் (20) வருடங்கள் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக செயற்பட்டிருத்தல், (விசேட தேவைகளின் போது பதினைந்து (15) வருட சேவை உட்பட ஏனைய தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்கும் உயர் நீதிமன்ற சட்டத்தரணிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக தெரிவு செய்யப்படுவர்).



விண்ணப்பதாரர் பதிவாளராக (நொத்தாரிசு) இருப்பது தகைமையாக கருதப்படமாட்டாது என்பதோடு, விண்ணப்பதாரரால் மூன்றாம் தரப்பின் ஊடாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமர்பிக்கப்படும் விண்ணப்பம் ஜனாதிபதி சட்டத்தரணியாக தெரிவு செய்யப்படுவதற்கான தகைமையாக கருதப்படாது.



பூர்த்தி செய்யப்பட்ட எழுத்துமூல விண்ணப்பப் படிவங்களை, உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் பிரதிகளுடன் 2023 ஓகஸ்ட் 25 அல்லது அதற்கு முன்னதாக "ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01" என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்ப உறையின் இடதுபக்க மேல் மூலையில் "ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமித்தல் - 2022 / 2023" என தெளிவாக குறிப்பிட வேண்டும். 



விண்ணப்படிவங்களைத் தரவிறக்கம் செய்துகொள்ள www.presidentsoffice.gov.lk 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »